அனைவர் மனத்திலும் ஆனந்தத்தையும், நம்பிக்கையையும் ஊட்டுகின்ற
அற்புத மாதமாக விளங்குகின்றது தை மாதம். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று மக்களால் பல காலமாகச் சொல்லப்படுகின்ற வாசகமே எல்லோருக்கும்
ஒரு புதிய நம்பிக்கைத் தெம்பைத் தருகின்றது.
தைமாதம் பூவுலகினராகிய நமக்கு மட்டுமல்ல, வானில் வலம் வரும் சூரியனுக்கும் ஒரு புதிய வழியைத் தேற்றுவிக்கிறது. ஆம்! ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் உலா வரும் சூரியன், தை முதல் நாள் தொடங்கி வடக்கு திசை நோக்கி பயணிக்கின்றான்.
‘உத்தராயண புண்ய காலம்’ என்று தை மாதத் தொடக்கம் சிறப்பிக்கப்படுகின்றது. ஆரம்ப நாளிலேயே அனைவரும் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். பூவுலகைத் தன் பொற் கிரணங்களால் புனிதப்படுத்தும் சூரிய தேவனுக்கு அவன் விளைவித்த தானியங்களால் நன்றி செலுத்து கின்றோம். நெற்கதிரை பொற்கதிரால் வணங்குகின்ற இந்தப் பொன்னான பொழுதில் சூரியனை வாழ்த்துவது நமது கடமை அல்லவா!
கவியரசர் கண்ணதாசன் கதிரவனை ஏற்றிப் போற்றுகையில்,
‘ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி!
அருள்பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் சாலப்பரிந்து
சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போல
துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க!
நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும்
போற்றுவோம்! போற்றி போற்றி!’
ஆதிசங்கரர் இந்து மதத்தின் சிறப்பாக ஆறு நெறிகளை வகுத்தார். அதனாலேயே இவரை, ‘ஷண்மத ஸ்தாபகர்’ என்று போற்றுகின்றோம். கணபதியை வழிபடுவது காணாபத்யம், சிவ பெருமானைத் தொழுவது சைவம், விஷ்ணுவைப் பணிவது வைணவம், சக்தி தேவியைப் போற்றுவது சாக்தம், குமரனைக் கொண்டாடுவது கௌமாரம் இவ்வரிசையில் பார்வைக்குத் தெரியும் பரம் பொருளான சூரியனை வாழ்த்தித் தொழுவது சௌரம் என வகுத்தார் ஆதிசங்கரர்.
ஆறு சமய வழிபாட்டில் நம்மவர்கள் கண்களால் காணக்கூடிய கடவுளாக சூரியன் மட்டுமே தோன்றி அருள்புரிகின்றார். மந்திரங்களில் முடி மணியாகத் திகழ்கின்ற, ‘காயத்ரி மந்திரம்’ சூரிய தேவனைப் போற்றும் மந்திரமே. இம்மகா மந்திரத்தை மகாகவி பாரதியார் தாம் இயற்றிய பாஞ்சாலி சபத காவியத்தின் இடையே தமிழில் மொழி பெயர்த் துத் தந்துள்ளார்.
‘செங்கதிர்த் தேவன் சிறந்த
ஒளியினைத் தேர்கின்றோம்!
அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!’
பிரபஞ்சத்தின் மூல ஒளியாகப் பிரகாசிக்கின்ற சூரிய பகவான், அனைவருக்கும் பார்க்க வைக்கின்ற சக்தியையும் கண்களுக்கு வழங்கு கின்றார். ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்கிற வாசகம் நூற்றுக்கு நூறு சூரிய வழிபாட்டின் பெருமையைப் பறைசாற்றுகின்றது.
‘காண்பானும், காட்டுவிப் பானும், காட்சியும், காட்சிப் பொருளும் அனைத்துமே இறைவன்’ என்ற கந்த புராணத் தத்துவத் தொடரினை மெய்ப் பிப்பது சூரிய வழிபாடு. ‘நீ ஒளி! நீ கடல்! நீ விளக்கம்! நீ காட்சி’ என்கிறார் மகாகவி பாரதியார்.
‘ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்!’
என்கிறார் இளங்கோவடிகள்.
சங்க இலக்கியத்தின் கடவுள் வணக்கமாகத் திகழும், நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையின் தொடக்க வரிகள்,
‘உலகம் உவப்ப வலன் ஏர்புதிரிதரு
பலர் புகழ் ஞாயிறு‘
என்று கதிரவனைச் சிறப்பிக்கின்றது.
ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அருண பகவான் சாரதியாய் அமர, ஆதித்தன் வலம் வருகின் றான். இச்செய்தியை அருணகிரியார், ‘மரகத, அருண குலதுரக உபலளித கனகரத’ என்றும், ‘எழுபரி ரதத்து இரவி’ என்றும் திருவகுப்பில் பாடுகின்றார். ஏழு நிறக் குதிரை என மெய்ஞானம் சொன்னது, விஞ்ஞானம் மூலமும் வானவில்லின் ஏழு நிறம் (ஙஐஆஎஙுகீ) என உறுதி படுத்தப்படுகின்றது.
பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், தைக் கிருத்திகை, தை அமாவாசை, ரத சப்தமி, தைப்பூசம் என இந்த உத்தராயண புண்ய காலத்தில் விழாக்களின் வரிசை விமரிசையாகத் தொடர்கிது.
‘சூரிய தேவனின் இந்த வடக்கு வழிப் பயண காலத்தில்தான் உயிர் பிரிய வேண்டும். இதுவே உத்தமமான புண்ணிய காலம் என அம்புப் படுக்கை யில் பீஷ்ம பிதாமகர் இவ்வரிய காலத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தார்’ என மகாபாரதம் கூறுகின்றது.
ராமாயணத்திலும் ராவணனை வதம் செய்யும் வலிமையை, ‘ஆதித்ய ஹிருதயம்’ ஜபித்தே ஸ்ரீராம பிரான் அகத்திய முனிவர் மூலம் அறிந்து கொண்டார்.
குந்தி தேவி வள்ளல் கர்ணனை யும், திரௌபதி அமுதசுரபியான அட்சய பாத்திரத்தினையும் சூரிய
தேவனை வழிபட்டே அவன் அருளால் அடையப் பெற்றனர். இவ்வாறு எண்ணற்ற பெருமைகள் பெற்ற சூரியனை இன்று வழிபடு வது உடல் நலத்துக்கும், மனத் தெளிவுக்கும், கண் ஒளிக்கும்,
தேவ நிறத்துக்கும் மூல காரணமாக அமைகிறது.
நாம் வாழும் பூமியே கதிரவனி லிருந்து வெடித்து வந்த ஒரு பகுதிதான் என அறிவியல் கூறுகிறது. அப்படியென்றால் பூ மண்டலத்தின் தாயாக விளங்கி கண்ணும் கருத்துமாக அன்னை எப்படி ஒரு குழந்தையை அரவணைப்பாளோ, அப்படி சூரிய மண்டலம் நம்மைப் பாதுகாக்கிறது. அதனால்தான் மகாகவி பாரதியார்,
‘பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே!
பானுவே! பொன் செய் பேரொளித் திரளே!
கருதி நின்னை வணங்கிட வந்தேன்.’
என்று பாடுகிறார்.
தமிழகத்தில் சூரியனார் கோயில், ஒரிசாவில் ‘கொனார்க்’ ஆலயம் இரண்டும் பிரசித்தி பெற்ற பிரத்யட்ச கடவுளான பிரபஞ்ச ஜோதி சூரியனுக்கு உகந்த கோயில்களாகும்.
சூரிய தேவனின் அருளால் விசுவாமித்திரர் காயத்ரி மந்திரத்தையும், யாக்ஞவல்கியர் சுக்ல யஜுர்
வேதத்தையும், மயூரகவி ஸம்ஸ்கிருதத்தில் சூரிய சதகத்தையும் அருளினார்.
அனைத்துக்கும் மேலாக, அன்னைத் தமிழ் மொழி யில் சூரியனின் புகழ் பாடுவதற்கென்றே ஆயிரம் பாடல்கள் கொண்ட வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடிய, ‘ஞாயிறு ஆயிரம்’ என்ற நூல் போல் எம்மொழியிலும் சூரிய இலக்கியம் இல்லை.
‘ஒப்பில் மாருதிக்கு ஒன்பது இலக்கணம்
செப்பி ஆண்ட திவாகர மூர்த்தியே!’
என்று தண்டபாணி சுவாமிகள், ‘ஞாயிறு ஆயிரம்’ நூலில் அனுமனுக்கு அனைத்துக் கலைகளையும் கற்பித்த ஆசான் என ஆதவனைப் போற்றுகிறார்.
தைப்பொங்கல் நன்னாளில் காசினியைக் காத்து மழை வளத்துக்கும், தானிய விளைவுக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும் அடிப்படை ஆதார சக்தியாக விளங் கும் ஆதவனை ஆராதிப்போம். நன்றிப் பொங்கலை சூரிய தேவனுக்குப் படைத்து மகிழ்வோம்.
Post Comment