ரேடியோவில் ஹேமாவதிக்குக் கச்சேரி என்றால், ஒரு வாரம்
முன்னா லிருந்து வீட்டில் ஒரே ரகளை யாயிருக்கும்.
ஹேமாவதி காலில், `ஸிலிப்பர்' போடாமல் வெறுந் தரையில்
நடக்கக் கூடாது; குளிர்ந்த நீர் சாப்பிடக்கூடாது;
கொஞ்சம் தொண்டையைக் கனைத்துவிட்டால் போதும், உடனே
டாக்டரை அழைத்துவர கார் பறக்கும். கழுத்தில் ஓயாமல்
கம்பளி மப்ளரைச் சுற்றிக் கொண்டேயிருக்க வேண்டும்.
தப்பித்தவறி தும்மிவிட்டால், `ஐயோ குழந்தை
தும்முகிறாளே', `ரேடியோக் கச்சேரி இருக்கிறதே!' என்று
வீட்டில் எல்லோரும் தவித்துப்போவார்கள்.
இவ்வளவு சர்வஜாக்கிரதையாக ஹேமாவின் குரலைக் கவனித்துக்
கொண்டு வந்த யக்ஞசாமி ஐயர், அவளுடைய உள்ளத் தைப்
பற்றிக் கொஞ்சம் அலட்சியமாயிருந்து விட்டார்.
ரேடியோ நிலையத்தில் அடிக்கடி ஹேமா வதியும்,
எஸ்.பி.சிவனும் சந்திக்க நேரிட்டது. இந்தச்
சந்திப்புகளின் காரணமாக, ஒருவரு டைய இருதயத்தில்
ஒருவர் இடம்பெற்று விட்டார்கள். விஷயம் முற்றி
வளர்ந்து ஒருவரையொருவர் கலியாணம் செய்து கொள்வது என்று
தீர்மானித்து விட்டார்கள்.
இந்தச் செய்தி
புதுடில்லியிலிருந்த தென்னிந்திய சமூகம் முழுவதற்கும்
தெரிந்த பிறகு, யக்ஞசாமி ஐயருக்கும் தெரிந்து விட்டது.
உடனே அவர் ரௌத்ராகாரம் அடைந்து, `புதுடில்லி
ரேடியோவும் கர்நாடக சங்கீதமும் எக்கேடாவது கெட்டுப்
போகட் டும்; ஹேமாவதியை இனி அங்கு அனுப்பு வதில்லை!'
என்று முடிவு செய்து விட்டார்.
ஷ்ரீ
எஸ்.பி.சிவனுக்கு இந்த விவரம் தெரிந்தபோது அவன்
வெந்நீரில் விழுந்த மீனைப் போல் துடிதுடித்தான்.
கடைசியாக ஒருவாறு ஐயரிடம் நேரிலேயே வந்து ஹேமாதியைத்
தம் வாழ்க்கைத் துணைவியாக அருளும்படி கோரினான்.
யக்ஞசாமி ஐயர் அவனைப் பார்த்து, "நீ என்ன
படித்திருக்கிறாய்?" என்று கேட்டார்.
"ஷேக்ஸ்பியர், மில்டன், கோல்ட்ஸ்மித், ஷெல்லி,
காளிதாசன், கம்பன், தாகூர், பாரதி இவர்களுடைய
கவிதைகளையெல்லாம் படித்திருக்கிறேன்" என்றான் சிவன்.
"அதைக் கேட்கவில்லை. எந்தப் பரீட்சை பாஸ்
செய்திருக்கிறாய்?" என்று கேட்டார்.
"எஸ்.எஸ்.எல்.சி., இண்டர்மீடியட், பி.ஏ.யில் முதல்
பார்ட், ஷார்ட் ஹாண்ட், டைப்ரைட்டிங் பரீட்சைகளில்
பாஸ் செய்திருக்கிறேன்" என்றான் சிவன்.
"வெறும்
அரட்டைக் கல்லியாயிருக் கிறாய்; சொத்து, சுதந்திரம்,
நிலம், புலம் ஏதாவது உண்டா?" என்று கேட்டார்.
"நிலம் புலன் ஏராளமாய் உண்டு. ஆயிரம் மைல் அகலம்,
இரண்டாயிரம் மைல் நீளம் உள்ள இமயமலை என்னுடையது தான்!"
என்று ஒரே போடாய்ப் போட்டான் சிவன்.
"என்னப்பா
உளறுகிறாய்? இமய மலை உன்னுடையதா?"
"ஆம் ஐயா!
மகாகவி பாரதியார் அப்படிப் பாடியிருக்கிறாரே,
தெரியாதா? `மன்னும் இமயமலை எங்கள் மலையே!' என்னும்
வரகவி வாக்கு பொய்யாகுமா?"
"ஆமாம், `மன்னும்
இமயமலை எங்கள் மலையே' என்று பாடிய அதே பாரதியார்,
`இன்னறு நீர்க் கங்கை ஆறெங்கள் ஆறே' என்றும்
பாடியிருக்கிறார். ஆகையால் கங்கை ஆற்றுக்கு நேரே போய்
அதில் விழுந்து விடு!" என்றார் யக்ஞசாமி ஐயர்.
இதையெல்லாம் கதவுக்குப் பின்னா லிருந்து
கேட்டுக்கொண்டிருந்த ஹேமாவதி விம்மி விம்மி அழுதாள்.
அவள் தன்னுடைய மை தீட்டிய கண்களைத் துடைத்துத்
துடைத்துப் பன்னிரெண்டு கைக்குட்டை கள் பாழாய்ப்
போயின. ஆனாலும் என்ன பயன்! சிவன் கங்கையில் விழு வதை
அவளால் தடுக்க முடியுமா? அல்லது அப் படி விழுந்தவனைக்
காப்பாற்றத்தான் முடியுமா? அவளுக்கு நீந்தத் தெரியாதே!
மேலும் கங்கை நீர் மிக்க குளிர்ச்சியாக ஜில்லென்று
இருக்கும் என்று அவள் கேள்விப் பட்டிருந்தாள். அப்
படிப்பட்ட குளிர்ந்த நீரில் கால் பட்டால் குரல்
என்னத்துக்கு ஆகும்? கர்நாடக சங்கீ தம் என்ன கதி ஆவது?
- `இமயமலை எங்கள் மலை' கதையிலிருந்து...
