டாக்டர்கள் வெளியே சென்றதும் ரங்கராஜன்
படுக்கையிலிருந்து எழுந்தான். முதலில் தான்
அணிந்திருந்த உடைகளைக் கவனித்தான். அவை தன்னுடையவை
அல்ல என்பது நிச்சயம். பிறகு அறையைச் சோதித்தான். அந்த
அறையை அதற்கு முன் அவன் பார்த்ததில்லை. அதிலிருந்த
சாமான்களும் அப்படியே பெட்டிகளைத் திறந்து
சோதிக்கலானான். அவைகளில் சாதாரண உடுப்புக்களுடன்
சரிகைப் பூ வேலைகள் செய்த வெல்வெட் சட்டைகள்,
குல்லாக்கள் முதலியவைகள் இருந்தன. அந்த அறையில் யாரோ
ஓர் இளம் ஜமீந்தார் பிரயாணம் செய்திருக்க வேண்டும்.
டாக்டர்கள் தன்னை அந்த ஜமீன்தார் என்பதாக நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் பரிசோதனை
செய்தபோது, `ஹிஸ்ஹைனஸ் ரங்க துர்க்கம் ராஜா' என்று
தலைப்பில் பெயர் அச்சிட்ட சில காகிதங்கள் அகப்பட்டன.
மறுபடியும் புரட்டியபோது, சில புகைப்படங்கள் கிடைத்தன.
அவைகளில் ஒன்றைப் பார்த்ததும் ரங்கராஜன்
திடுக்கிட்டான். ஏனெனில், அப்படத்திலிருந்த உருவம்
அவனைப் போலவேயிருந்தது. மூக்கு, முழி, உதடு, நெற்றி,
தலைக் கிராப்பு எல்லாம் தத்ரூபம். உடையில் மட்டும்தான்
வித்தியாசம் காணப்பட்டது.
