தாக்கரே சகோதரர்களின் மூர்க்கம்!
சண்டை போட்டுச் சிண்டைப் பிய்த்துக்கொண்ட ராஜ் தாக்கரே- உத்தவ்
தாக்கரே இருவருமே ஒற்றுமையாய் இருப்பது பிரதேசப் பித்தில் மட்டும்தான்!
"மஹாராஷ்டிரா பிற மாநிலத்தவர்க்கு அல்ல," என்கிற அவர்களது குருட்டுப்
பிடிவாதம் அநீதி மிக்கது; யதார்த்த நோக்கில் பலவீனமானது.
பா.ஜ.க. தலைவரும் ஆர்.எஸ்.எஸ். தலைவரும் சொல்வதுபோல, மஹாராஷ்டிரா
இந்தியர் யாவருக்கும் சொந்தமானது. இந்நாட்டின் எந்தக் குடிமகனும்
தேசத்தில் எங்கு வேண்டுமானாலும் குடியேற உரிமை பெற்றவன்தான் - அரசியல்
சாசனமே இதை உறுதி செய்கிறது.
ராகுல் காந்தி சொல்வதைப் போல,
மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தபோது (26/11) எதிர்கொண்டு
போராடியவர்கள் மஹாராஷ்டிர வீரர்கள் மட்டுமல்ல; நாட்டின் பல
பாகங்களிலிருந்து திரட்டப்பட்ட ராணுவத்தினரும்கூட.
மஹாராஷ்டிரம்
மராட்டியர்களுக்கே என்றால், இந்தியாவின் இதர பகுதிகள் அவர்களுக்கு
இல்லாது போகும். மஹாராஷ்டிராவுக்கு வெளியே அனைத்து மாநிலங்களிலும்
மராட்டி மக்கள் எவ்வாறெல்லாம் தங்கள் உழைப்பு, திறமை, அறிவால்
பங்களித்து, செல்வாக்கும் செல்வமும் பெற்று வருகின்றனர் என்கிற
பட்டியல் மலைக்க வைக்கும்.
ஆக, தாக்கரே சகோதரர்களின் பிரிவினை
பல்லவி, சுயநல அரசியல் விரிக்கும் வார்த்தைப் பந்தல்தானேயொழிய,
நடைமுறைக்கேற்றதல்ல.
ஆனால், இத்தகைய வார்த்தைப் பந்தல்கள் தவறான
உணர்வுகளைத் தூண்டி, எளிய மக்களை உசுப்பிவிடும். சுயமாகச் சிந்தித்து
இதன் அபத்தத்தை உணர முடியாத பல லட்சம் மஹாராஷ்டிர மக்களை, பிற
இந்தியர்கள் பேரில் காரணமின்றி வெறுப்பு கொள்ளச் செய்யும். மிகச்
சுலபமாக வெறியைத் தூண்டி, வன்முறை வெடிக்கச் செய்யும். எனவே, பிற
கட்சியினர் இந்த விவகாரத்தில் சீரிய நோக்குடன் ஒருங்கிணைந்து செயல்பட
வேண்டிய அவசர அவசியம் இருக்கிறது.
சிவசேனாவின் தேர்தல்
கூட்டாளியான பா.ஜ.க, இது விஷயத்தில் வேறுபடுவதும், காங்கிரஸும்
பா.ஜ.க.வும் ஒரே விதமான கருத்தில் இருப்பதும் மிக ஆரோக்கியமானது. மற்ற
எந்தக் கொள்கைகளில் வேறுபட்டாலும் தேச ஒற்றுமை என்பதை
விட்டுக்கொடுப்பதற்கில்லை என அக்கட்சிகளின் நிலைப்பாடு உணர்த்துகிறது.
இதனை ஒரே மேடையில் அக்கட்சியினர் இணைந்து வெளிப்படுத்த வேண்டும். இந்த
இலட்சிய நோக்கில் கை கொடுக்கக்கூடிய இதர கட்சியினர், தனியார்
அமைப்புகள், சேவை அமைப்புகள் ஆகியவற்றுடன் கைகோத்து, `இந்தியா ஒன்றே;
அது இந்தியர்களுக்கே' என உணர்த்த வேண்டும். இதைச் செய்தால் மஹாராஷ்டிர
மக்களின் சிந்தனையை, சரியான திசைநோக்கித் தூண்ட முடியும். இதர மாநில
மக்களுக்கும் பாதுகாப்பு உணர்வு ஏற்படும்.
பதினான்கு முதல்
பதினேழாம் நூற்றாண்டுகளில் இந்த நாட்டில் பரவிய பக்தி - சங்கீர்த்தன
இயக்கம், மஹாராஷ்டிராவில்தான் முளைவிட்டது. பின்பு பஜனை சம்பிரதாயம்
என்கிற அழகிய மரபாக உருவெடுத்தது. பாரதத்தை இணைத்துக் கட்டியது. இந்த
மரபில் அனைத்து மொழி கீதங்களுக்கும் இடம் உண்டு.
முன்னோர்
வளர்த்த உணர்வுபூர்வமான ஒற்றுமையை முனைந்து கலைப்பதில் ஆர்வம் காட்டும்
சிவசேனையின் மூர்க்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மதிநுட்பத்தால் உருவாகி, ஒருமைப்பாட்டு உணர்வால் கட்டுண்ட ஓர் இயக்கம்
மீண்டும் வளர்ந்து பரவ வேண்டும்.
இந்த ஒரு விஷயத்தில்
அரசியலையும் மதம் - மொழிகளையும் கடந்த ஓர் இயக்கத்தை கட்கரியும் ராகுல்
காந்தியும் இணைந்து உருவாக்கினால், இந்தியா அவர்களை என்றென்றும்
வாழ்த்தும்.
