பிரதமரின் அபத்த வாதம்!
மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோதுதான் இந்தியப் பொருளாதாரம்
புத்துணர்வு பெற்று வளர்ச்சிப் பாதையில் முன்னேற ஆரம்பித்தது. அவருடைய
பொருளாதார ஞானமும் - தொலைநோக்கும் உலகளாவிய கவனம் பெற்றன. இன்று, அதே
மன்மோகன் சிங், நிதியமைச்சருக்குக் கொள்கையை வகுத்துத் தரவல்ல பிரதமர்
பதவியில் இருக்கிறார்... ஆனால், அவரது பொருளாதார நிபுணத்துவம் எங்கே
போயிற்று என்பதுதான் புரியாத புதிர்!
2010-11-ஆம் ஆண்டுக்கான
நிதிநிலை அறிக்கையில், விண்ணைத் தொடும் நிதிப் பற்றாக்குறை ஒரு
புறமிருக்க, அரசு வாங்கும் கடன் தொகையானது மில்லியன் - பில்லியன்
கணக்கையெல்லாம் தாண்டி, ட்ரில்லியனைத் தொட்டுவிட்டது! அரசின்
ஒட்டுமொத்தக் கடன் சுமை ஒன்பதுமுதல் பத்து ட்ரில்லியன்!
அரசு
தனது செலவுகளைக் குறைத்துக்கொள்ளவில்லை; கடனை மட்டும்
அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது.
கடந்த ஆண்டு பெற்ற கடன்
தொகையில் எண்பது சதவிகிதம் பணம், உற்பத்திக்கு உதவாத செலவினங்களுக்கே
வினியோக மாயிற்று! இவ்வாண்டு அதைச் சற்றே குறைத்து, எழுபத்து மூன்று
சதவிகிதத்துக்குள் அடக்க முற்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால்,
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மொத்தக் கடன் தொகையும் - அதற்கான
வட்டியும் பன்மடங்கு அதிகம் என்பதைப் பார்க்க, இந்த அரைகுறை
முயற்சியினால் பொருளாதாரத்தில் எவ்வித முன்னேற்றமும் விளையாது.
அரசுக் கடன் தொகையில் எழுபத்து மூன்று சதவிகிவிதம், உற்பத்திக்கு
உதவாமல், புழக்கத்துக்கு மட்டும் வருகிறபோது, பண வீக்கம் அபரிமிதமாகும்
என்பது அடிப்படையான பொருளாதார விதி. இதன் காரணமாக விலைவாசி மேலும்
ஏறும் என்பதும் உறுதி. வெந்த புண்ணில் பாயும் வேலாக, பெட்ரோல் - டீசல்
விலை உயர்வினால் சரக்குக் கட்டணங்களும் அதனால் பொருட்களும் விலை
ஏறத்தான் போகின்றன.
இந்த நிலையில், ஏழைகளுக்கு மானியங்கள், வேலை
வாய்ப்பு உறுதித் திட்டம், இதர இலவசங்கள் மூலமாக அரசு பேருதவி
செய்வதாகச் சித்திரிக்கிறது! வரி செலுத்தும் மாத வருமானப்
பிரிவினருக்கு (உயர் வருமானப் பிரிவு), வருமான வரிக் குறைப்பு மூலம்
பளு குறைப்பதாகக் காட்டவும் இவ்வரசு முயன்றுள்ளது! ஒட்டகத்தின்
முதுகில் ஒரு பெரும் போரை ஏற்றிவிட்டு, ஒற்றைப் பிரியை உருவிப் போடும்
கண் துடைப்புதான் இந்த நடவடிக்கைகள்.
எதிர்க்கட்சிகள் வீதியில்
இறங்கிக் கொடி பிடிப்பதாலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தடை
செய்வதாலும் மக்களுக்கு நிச்சயமாக நிவாரணம் கிடைக்காது. அதனால்
ஏற்படக்கூடிய இடைஞ்சல்களால் மக்களின் எரிச்சல்தான் அதிகரிக்கும்.
இந்த பட்ஜெட் ஏன் மோசமானது என்பதை நாடாளுமன்றத்தில் எடுத்துப்
பேசுவதும்- விவாதிப்பதும் அவசியம். சர்வதேச கச்சா எண்ணெய் விலையையொட்டி
இந்திய பெட்ரோலியப் பொருட்களின் விலையையும் நியாயமாக அமையும் வண்ணம்
நிர்ணயிக்க முடியும் என்பதை விவாதங்களில் எடுத்துச் சொல்லவேண்டும்.
"பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தாவிட்டால் தொழில் - முதலீடு சூழல்
பாதிக்கப்பட்டு, வேலை வாய்ப்புகள் குறையும்," என்று பிரதமர்
முன்வைத்துள்ள வாதத்தின் அபத்தத்தை விளக்கிச் சொல்ல வேண்டும்.
எதிர்ப்புணர்வினால் எந்த மெஜாரிட்டி அரசும் திருந்திவிடாது; மக்கள்
விழிப்புறும்போதுதான் திருந்தவும் மாறவும் நிர்ப்பந்திக்கப்படும்.
